செவ்வாய், 30 ஏப்ரல், 2013

(மறு)பிறவி(கள்)



நமது இசைஞானியின்  இசை வடிவில் கேட்ட  மாணிக்கவாசகரின்  திருவாசக பாடல்களில் என்னை மிகவும் கொள்ளை கொண்டது பொல்லா வினையேன் என தொடங்கும் அந்த இருபது  நிமிட பாடல் தான் (எல்லா பாடல்களுமே  ஒரு அற்புதம் தான், எல்லோரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஒரு  படைப்பு )  அதில் வரும் இந்த வரிகள் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது 


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

ஒரு மனிதன் வெவ்வேறு பிறவிகள் எடுக்கிறான் என்பது  நமது பழங்கால நம்பிக்கை. நாம் பெரும்பாலும் இதை நம் இறப்பிற்கு பிறகு நமது உயிர் வேறொரு உருவம் பெரும், இந்த உடல் அழிந்துவிடும் என்று நினைத்திருக்கலாம். நான் இதை வேறொரு கோணத்தில் பார்க்க ஆசைபடுகிறேன். நேற்று புல்லாய் இருந்தது இன்று நான் உட்கொண்ட உணவு வழியாக எனக்குள்ளே ரத்தமாக, தசையாக மாறிவிட்டது, நேற்று பறவையாய், மிருகமாய், பழமாய் இருந்தவைகள் இன்று நானாக உருமாறி உள்ளன. அதே போல் நேற்று என்னுடம்பில் அங்கமாய் இருந்த பல  அணுக்கள்  சுவாசக்காற்றாய், நீராய்  இன்றென்னை விட்டு பிரிந்து காற்றோடு காற்றாக, நிலத்தினுள் நீராக கரைந்து விடுகிறது. இது மட்டுமில்லாமல் நமது உடலில் உள்ள செல்கள் பல தினமும் நாம் சுவாசிக்கும்போதும், குளிக்கும்போதும், உடல் கழிவுகளை அகற்றும் போதும்  மரிக்கிறது புதிதாக வேறு ஒரு செல்கள் பிறக்கிறது. அதாவது நாம் தினமும்   இறந்து கொண்டுதானிருக்கிறோம்,  நம்மில் ஒரு சிறய பகுதியை இழந்து கொண்டுதானிருக்கிறோம். Dr. Frisén என்னும் ஆராய்ச்சியாளர் தனது கட்டுரையில், நமது உடலில் உள்ள செல்களின் ஆயுட்காலம் குறித்து கூறுகையில், நம் உடம்பில் உள்ள செல்களில் ஒரு சில செல்களை தவிர மீதம் உள்ள செல்கள் அனைத்துக்கும் குறகிய அய்ட்காலம் தான் உள்ளது, அதாவது 7-10 வருடத்தில் நமது உடலில் உள்ள அணைத்து செல்களும் புதிப்பிக்க படுகின்றன. 10 வருடத்திற்கு முன் இருந்த உடல் நம்மிடம் இல்லை, நாம் ஒரு புதிய பிறவி. இதை கூறுகையில் கவிஞர் அப்துல் ரஹ்மான் புகைப்படங்கள் குறித்த தனது கவிதையில் கூறுவதுபோல்

"இது புகைபடங்களில்லை, பிணங்களின் படங்கள் " 

என்ற வரி மிக பொருத்தமானதாக தோன்றுகிறது. அதே போல் 10 வருடத்திற்கு முன் இருந்த நமது உடல் வேறொரு வடிவில், புல்லாகி இருக்கலாம், புழுவாகி இருக்கலாம் ஆயினும் அது நம்மிடம் இருந்து பிரிந்த அணு , செல்.  

இதுவே அசைவம் ஏன் உண்ணக்கூடாது  என்பதற்கு சைவம் உண்பவர்கள் கூறும் கருத்து, அதாவது மிருகத்தின் தசைகளை நாம் உண்ணும்போது, நாம் நமக்குள்ளே அந்த மிருகத்தை புதைத்துக்கொள்கிறோம். அதன் மூலமாக நாமும் மிருகத்தின் குணாதிசியங்களை பெறுகிறோம், ஆகவே அசைவம் உண்ணக்கூடாது என்பதே ஆகும். 

மேற்கூறியவை நமது உடல் சம்பந்தப்பட்ட ஒரு பார்வை, எப்படி உடல் இந்த பிறப்பிலே எல்லா உருவங்களும் எடுக்க சாத்தியப்படும் என்பதற்கு எனது பார்வையில் ஒரு சிறய அலசல்.


இதையே நாம் வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், அதாவது  மனதளவில் நம் வாழ்நாளில், நாம் சில சமயங்களில்  சாதாரன மனிதராய்,  சில சமயங்களில் முதுகெலும்பில்லாத புழுவாய், சில சமயங்களில் சுத்தமான மனம் படைத்த தேவராய், சில சமயங்களில் மிருகமாய், சில சமயங்களில் அரக்கனாய், சில சமயங்களில் கடவுளாய் என எல்லா பிறப்பும் வாழ்கிறோம்.
நாம் பிறர்க்கு உதவும் பொது தேவராகவும்,அன்புகாட்டும் பொது கடவுளாகவும், அநீதியை கண்டு ஒதுங்கி செல்லும் பொது புழுவாகவும், கோபப்படும் போது மிருகமாகவும், சுயநலத்தில் அரக்கனாகவும் வாழ்கிறோம்.
இதில் அதிகபடியான நேரம் எவ்வாறு வாழ்கிறோமோ அதுவே நமது குணாதிசியமாக, நமது வாழ்வாக மாறுகிறது.
எங்கேயோ படித்ததொன்று ஞாபகம் வருகிறது, "எல்லோர்க்கும் எல்லாமும்  நிகழும், நமக்கு தேவையானதெல்லாம் அதற்க்கான நேரமும், பொறுமையும்தான்". எல்லோரிடமும் எல்லா குணங்களும் உண்டு அதில் நல்லதை வெளிகொனரவே தியானம் போன்ற முயற்சிகளால் எல்லோரும் போராடுகிறோம்.


ஆக மனதளவிலும் சரி, உடலவிலும் சரி நாம் எல்லா பிறவியும் எடுக்கிறோம் என்பதே எனது கருத்து. உங்கள் கருத்தையும் தெரிவித்தால் நலம்.


  

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஒரு நாள் ஒரு காதல் - சிறுகதை

காதலை பற்றிய ஒரு நீண்ட உரையாடலுக்கு பின் தனிமையில் எதோ சிந்தித்து கொண்டிருந்தேன். அப்படியே பின்னோக்கி சென்று யார் யாரையெல்லாம் நான் காதலித்தேனென்று (ஒருதலையாக தான் ) எண்ணிக்கொண்டிருந்தேன் . அப்போது சுத்தியால் பின்மண்டையில் அடித்தது போல் ஒரு கேள்வி "அதெல்லாம் சரி உன்னை யாரவது காதலித்தார்களா என்று" நானும்  இந்த கேள்விக்கு விடை என்னுடய கடந்த காலத்தில் இருக்கிறதா  என்று தேடி கொண்டிருக்கும் போதே "ஒன்னு கூட கிடையாது என்று பதில்". ஆமாம் ஒன்று கூட  இல்லை என்று நினைக்கும் போதே "இருக்கு" என்று இன்னொரு குரல், இருக்கா, அது எப்படி எனக்கு தெரியாமல் போனது, என்னிடம் யாருமே சொல்லவேயில்லையே. நீ அப்போது வேறொரு உலகத்தில் இருந்தாய், உன் காதில் விழுந்தது கூட உன் மூளைக்கோ, மனதிற்க்கோ செல்லவில்லை.    

 யாரது என் மனைவியா, அதான் தெரியுமே  அவளில்லை, அப்போ யார்? என்னுடன்  டியூஷன் படித்த பெண்ணா(நான் படிச்சது ஆண்கள் பள்ளி),  அக்கம்பக்கத்து வீட்டு பெண்ணா, கோவிலுக்கு வருகிற பெண்ணா, உறவுக்கார பெண்ணா,  கல்லூரியில் என்னுடன் படித்தவளா யாரது ? நீ வேலை செய்த இடத்தை விட்டு விட்டாயே. அங்கே யார்  என்ற யோசனையில் மூழ்கிபோனேன்.

ஒரு கம்ப்யூட்டர்  சென்டரில்  வேலை செய்து கொண்டிருந்த நேரம்,  அதிக கூட்டம் இல்லாத நேரம்  ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வகுப்புகள் தான் இருந்தன. ஒரு நாள் காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது , கான்வென்டில் தங்கி படிக்கும் இரண்டு பெண்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் படிக்க வந்தார்களா, வேலை செய்ய வந்தார்களா என்று ஞாபகம் இல்லை. வழக்கமாய் இருக்கும்  எதிர்பார்ப்போ, இரண்டு பெண்களை சந்திக்க போகும் ஆவலோ, எந்த ஒரு காதல் சுரப்பியும் என்னை ஏதும் செய்யவில்லை.

  பத்து மணிப்போல் இரண்டு பெண்கள்  ஒரு சைக்கிளில் வந்தனர், இருவரும் சராசரி கிராமத்தின் ஏழை  பெண்கள் என்பது பார்த்ததும் தெரிந்தது, ஒல்லியான தேகம், எண்ணெய்  வைத்த தலை, மலிவான சுடிதார், சார் என்று அழைக்கும் குரல். ஒருத்தி கொஞ்சம் உயரம், கொஞ்சம் கருப்பு இன்னொருத்தி கொஞ்சம் குள்ளம் கொஞ்சம் மாநிறம். இருவரும் வந்து அறிமுக படுத்திகொண்டார்கள். இரெண்டொரு நாட்கள் இப்படியே சென்றது, தினமும் இரண்டு வகுப்புகளுக்கிடையே நங்கள் பேசி கொண்டிருப்போம், அதில் ஒருத்தி கேள்வி மேல் கேள்வி கேட்பாள், சார் உங்களுக்கு பிடிச்ச நடிகர் யார், நடிகை யார், என்ன கலர் பிடிக்கும் , என்ன புத்தகம் படிப்பீர்கள் இப்பிடியாக  சார் சார் சார்ன்னு பேசிகொண்டே இருப்பாள், இன்னொருத்தி ஏதும் பேசமாட்டாள். ஒரு நாள் மதிய உணவிற்கு பிறகு பேசிகொண்டிருந்தோம் திடீரென்று அவள் சார் ஒரு விளையாட்டு  விளையாடலாமா என்றாள், என்ன விளையாட்டு என்றேன் ரெண்டு பெரும் கண் சிமிட்டாமல்  பார்த்துகொண்டே இருக்க வேண்டும் யார் முதலில் கண்சிமிட்டுகிறார்களோ அவரே தோற்றவர் என்றாள், சரி என்று பார்க்க ஆரம்பித்தோம், பார்த்துக்கொண்டிருந்தோம், கருத்தமுகம் , வெள்ளைக்கண்கள், கருவிழி, பாப்பா என்று பயணித்து கொண்டிருந்தேன், இதில் யார் தோற்றோம் என்று தெரியவில்லை, அதற்குள் மதிய வகுப்பு ஆரம்பிக்க நேரம் ஆனதால் விளையாட்டை நிறுத்திவிட்டு சென்றுவிட்டேன். மாலை வகுப்பு முடிந்தவுடன் ஒரு தொலைபேசி அழைப்பு.

எனக்கு நிச்சயதார்த்த தேதி முடிவு செய்யபட்டது என்று சொன்னார்கள், நானும் அந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன், அடுத்த நாள்  வேலைக்கு வந்தேன், அன்று ஒருத்தி மட்டும் தனியாக வந்தாள், எங்கே இன்னொருத்தி என்றேன் அவளுக்கு உடம்பு சரில்லை என்றாள், அடுத்தநாளும் அவள் வரவில்லை ஏன் என்று கேட்டேன் இனிமே அவ வரமாட்டா என்றாள்  ஏன் என்று மீண்டு கேட்டதும் சொன்னாள்,

உங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னீங்கல்ல அதான்,
 அதுக்கு?
அவ ... உங்கள ...
என்ன லவ் பண்றாளா ?
நீங்க ஏன் முன்னாடியே சொல்லல,
எனக்கு கல்யாணம்ன்னு தலையில எழுதியா  ஓட்டிக்க முடியும், 
அவளால அதை  தாங்கிக்க முடியல, ரொம்போ அழுதா

இந்த சம்பவம்  என் சிந்தனையில் நில்லாமேல் போனதிற்கு, நான் காதலிக்கவும், என்னை காதலிக்கவும் ஒருத்தி வந்துவிட்டாள் என்ற சந்தோசமே. இதுவே அந்த பெண்ணை சந்தித்த போதும், பேசிக்கொண்டிருந்தபோதும், விளையாடியபோதும் எனக்குள் எந்த ஒரு சலனமும் சந்தேகமும் வராமல் இருந்ததன் காரணம்.

என்னிடம் சொல்லபடாத, நான் சுவைக்காத, நான் தவறவிட்ட  ஒரே காதல் அதன் ஆயுள் ஒரே நாள் .
இப்போ சொல் என்னை யாரவது காதலித்தார்களா ?










    



     



சனி, 27 ஏப்ரல், 2013

சந்தோசம்


சென்ற ஞாயிறு(எந்த ஞாயிறு ன்னு சரியா தெரியல ) பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒரு பிரபல ராப் பாடகியின் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது, அதில் சிந்திக்க  வேண்டிய இரண்டு விஷயங்களை உங்களோடு  பகிர்ந்து கொள்கிறேன்.







DIAMS என்கிற Melanie , இவர் 2003 முதல் பிரான்சு  நாட்டின் ராப் ராணியாக வளம்வந்தவர்; இவருடைய பல பாடல்கள் காதல் பற்றியும், சமுதாய கோபம்  பற்றியும் சில பாடல்கள் அரசியல்வாதிகள் பற்றி நேரடி விமர்சனமாக இருந்தது,   இவருகேன்று ஒரு இளைஞர்  கூட்டம் இருந்தது, குறிப்பாக பெண்கள். இவருடைய பாடல்கள் இளைய சமுதாயத்தை கெடுப்பதாய் சில பழமைவாதிகள் குறை கூறுவதுண்டு. பல இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று மிகவும்   பரபரப்பான நட்சத்திரமாக இருந்தார். 2008 இறுதிகளில் இவர் திடீரென்று இசை உலகிலிருந்து காணமல் போனார். சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு பெரிய பத்திரிகை ஒன்றில் அவர் புகைப்படம் ஒன்று வெளியானது, அதில் அவர் முழு பர்தா அணிந்த ஒரு முஸ்லிமாக இருந்தார், இது அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏற்கனவே இவர் மீது குறை கூறிய பழமைவாதிகள், இவர் மத மாற்றத்திற்கு ஊக்குவிக்கிறார் என்றும், முஸ்லிம் மதத்தை பரப்புகிறார் என்றும், இவரை உதரணமாக கொண்ட இளைய சமுதாயதிற்கு தவறாக வழிகாட்டுகிறார் என்றெல்லாம் கொதித்தனர். Diams அந்த பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார்.
பிறகு ஒரு பெரிய இடைவெளி விட்டு, இப்பொழுது சுயசரிதை ஒன்றை வெளியிட்டார், அதை தொடர்ந்து  தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அந்த பேட்டியை பற்றியது தான் இந்த பக்கம்.

பலவகையான  கேள்விகள் இந்த பேட்டியில் கேட்கப்பட்டது, அதை இரண்டு கேள்விகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒரு மிக பெரிய பிரபிலமான நட்சத்திரமாக இருந்த நீங்கள், ஒரு ரசிகர் கூட்டத்தை உங்களுக்கென்று வைத்திருந்த நீங்கள், உங்களுக்கு ஒரு வீடு உங்கள் அன்னைக்கு ஒரு வீடு என்று இரண்டு வீடுகள் வாங்கி வசதியாய் இருந்த நீங்கள் ஏன் திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்றீர்கள்?

ஆம்

 நீங்கள் சொல்வதுபோல் எல்லாமே  இருந்தது பணம் பேர் புகழ் , ஆனால் எதோ ஒன்று இல்லாமலே இருந்தது. மிக அதிகமான நாட்கள் நான் தனியே என் படுக்கையறையில் இருப்பதாய் உணர்ந்தேன், பல முறை கண்ணீர் விட்டழுதேன், மனோ தத்துவ மருத்துவரை அணுகினேன், மருந்துகள் உண்டேன் இப்பொழுது சந்தோசமாய் இருக்கிறேன். என்னை அன்பு செய்த உள்ளங்களை என்னால் மறக்க முடியாது அனால் இந்த வாழ்க்கை  எனக்கு தேவை பட்டது.


பிறப்பில் கிறிஸ்துவரான நீங்கள் இஸ்லாத்தை தழுவ காரணம்  என்ன ?

எனது தாத்தாமார்களும் பாட்டிமார்களும் மிகவும் பக்தியுடன் தான் இருந்தார்கள், என்னை ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்திற்கு அழைத்து செல்வார்கள் , எனது பெற்றோர்கள் கடவுளை நம்பினாலும் சில சமயங்களில் மட்டுமே ஆலயத்திற்கு சென்றார்கள், நான் மனம் வருத்தத்தில் இருந்தபோது எனக்கு ஒரு நண்பர் மூலமாக குரான் திருநூல் கிடைத்தது, நானும் அதை இரண்டு முறைக்கு மேல் படித்தேன், மிகவும் ஆறுதல் அடைந்தேன். இஸ்லாமியர்கள் செய்யும் தவ முயர்ச்சியும், ஜெபங்களும் என்னை வெகுவாய் கவர்தன. யாரும் இப்பொழுது அதுபோல் கடவுளுக்கான அன்பை வெளிபடுத்துவது இல்லை. அதுவே எனக்கு பிடித்திருந்தது. அவ்வாறு வெளிபடுத்துதல் மிகவும் அவசியம் என்று எண்ணுகிறேன் இப்பொழுது நான் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

இந்த இரண்டு பதில்கள் என்னை மிகவும் பாதித்தது, இதில் சந்தோஷ பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் , வழக்கமாக pop பாடகர்கள் போதைக்கு அடிமையாவதை பார்த்திருக்கலாம், தவறான பாதைக்கு சென்று இறந்தும் பொய் இருக்கலாம், ஆனால் இவர் ஒரு அன்பின் பாதையை தேர்ந்தேடுதுள்ளார். இதில் நான் சிந்தித்த விஷயம் என்னவென்றால் நாம் இதுவரை நம்பிவந்த மதத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தருகிறோமோ இல்லை ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றிடத்தை தருகிறோமா? அதுவே நாளை நம் பிள்ளைகள் பாதையாகி போகிறது. ஒரு வேற்றிடத்தில் ஒரு நல்ல எண்ணம் புகுந்தால் நல்லது, அதுவே ஒரு தப்பான(போதை, தீவிரவாதம்,... ) எண்ணமாக ஆகிவிட்டால் என்ன செய்வது.  இப்படித்தான் எல்லா மத மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன  என்பதும் மறுக்க முடியாது. எந்த மதமாகினும் அன்பின் வழி சொன்னால் எந்த ஒரு தடையும் இல்லை.

ஆரம்பத்தில் இரண்டு விஷயம் என்று சொன்னேன் அல்லவா, பணம், பேர், புகழ் மட்டும் இருந்தால் ஒருவன் சந்தோசமாக  இருக்க முடியாது, என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்(இது எதுவேமே இல்லை என்றாலும் சந்தோசமாய் இருக்க முடியாது , சந்தோசம் என்பது நான் வரையறுக்கும் ஒரு விஷயமே, என்னுடைய பழைய பதிவில் இதே போல்  ஒரு சிறை கைதியின் சந்தோசத்தை சொன்னேன் )



பி கு : இந்த பதிவு diams அவர்களை பற்றியோ அவர்களின் இசையின் தரத்தை பற்றியோ அவர்களின் மத தேர்வை பற்றியோ இல்லை .
 இது அறிவுரை இல்லை எனது எண்ண ஓட்டங்களே