திங்கள், 22 அக்டோபர், 2012

அமெரிக்கா பயணம் சில நிமிடங்களில்

சென்ற பகுதியை படிக்க 



காலையில் கிளம்பி பெற்றோருக்கு தொலைபேசியில் விடை கூறிவிட்டு, பிள்ளைகளை எழுப்பி அவர்களிடம் முத்தங்கள் பெற்று, விடையும் பெற்று மனைவியுடன் ரயில் நிலையம் நோக்கி சென்றோம், உடனே வந்துவிட்டது ரயில் நிலையம், பிரிவினை பார்வையிலும் பகிர்ந்துக்கொண்டு பிரிந்தோம், அவள் செல்லும் வரை நின்றுவிட்டு பின் ரயில் நிலையம் நுழைந்தேன். விமானநிலையம் செல்ல நடுவில் ஒரு train மாறவேண்டும். மாறவேண்டிய இடத்திற்கு போகும் ரயில் பாதி வழிதான் போகும் அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து செல்லவேண்டும் என்று அறிவிப்பு பலகையில் பார்த்ததும் சற்றே குழப்பம், வழக்கமாய் தோன்றும் சகுன தடை எண்ணம் தோன்றாமல் இல்லை, அந்த எண்ணத்தை சற்றே கண்டுக்கொள்ளாமல், வழக்கமாய் எனக்குள் நடக்கும் சுய அறுதல் வார்த்தைகளும் அதற்கு எதிர் வாக்குகளுக்கும் இடம் கொடுக்காமல், மனைவிக்கு அலைப்பேசியில் அழைப்பு விடுத்தேன், அவளும் வந்தாள் பதற்றத்துடன், பாதி பனி மூட்டத்தில் என்னை விமான நிலையம் வரை வந்து விட்டு சென்றாள். தனியாய் போகிறாள், அவள் driving யில் நம்பிக்கை இருந்தாலும், அவள் வீடு செல்லும் வரை கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது.

விமானநிலையம் உள்ளே ஒரு பெரிய வரிசை நின்றுகொண்டிருந்தது, இத்தனை பேர் இவ்வளவு கூட்டமா எங்கே தான் போகிறார்களோ தெரியவில்லை; நான் அங்கு தனியாய் இருந்த ஒரு சுய சேவை இயந்திரத்தில் என் பயணத்தை பதிவு செய்தேன், அதில் இருக்கை எண்ணை தேர்வு செய்யும் வாய்ப்பு இருப்பதால், உடனே ஜென்னல் அருகே இருக்கை கிடைக்குமா என்று தேடினேன், எங்கும் இல்லை, இருந்தாலும் இப்பொழுது இருக்கும் இருக்கையை விட பின்னால் ஜென்னல் ஒட்டிய வரிசையில் நடு இருக்கை நன்றாக இருக்கும் என்று நினைத்து  அதை தேர்வு செய்தேன், அதை தேர்வு செய்ததில் இன்னொரு காரணமும் இருக்கு, எங்கே நம்மை சக ஊழியர்களுடன் சேர்த்து உட்காரவைத்துவிடுவார்களோ என்றுதான். சக ஊழியர்களுடன் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், ஒரு சுதந்திரம் வேண்டியே இந்த முடிவு. விமான நிழைவு சீட்டு எடுத்தவுடன் என் சகாகளுக்கு(சக ஊழியார்களுக்கு) அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்துவிட்டு நான் அவர்களுக்காக காத்துகொண்டு இருப்பதாக சொல்லிவிட்டு, காத்திருந்தேன் மணி 8 : 30.

கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது, ஒன்பது மணிக்கு ஒரு சகா அலைப்பேசியில் அழைத்தார் நான் எடுப்பதற்குள் இணைப்பு துண்டாகிவிடவே அவர் நுழைவு சீட்டு பெறவும் பெட்டியை மற்ற பெட்டிகளுடன் விமானத்தில் ஏற்றவும் சென்றுவிட்டார், நான் அதுவரை என் பெட்டியை என்னிடமே வைத்திருந்ததால் நானும் பெட்டியை ஒப்படைக்க சென்றேன், அங்கேயும் வரிசை எல்லாம் முடிந்து சோதனை வரிசைக்கு சென்றோம் அது இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டது, இரெண்டாவது சகாவும் வந்து சேர்ந்தார் மூவரும் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தோம், இன்னும் 50 நிமிடங்களில் விமானம், வரிசை நகர்வதாக தெரியவில்லை திடீரென்று ஒரு விமான பணிப்பெண் வந்து எங்களை ஒரு குறுக்கு வழியில் எல்லோருக்கும் முன்னதாக பாதுக்காப்பு சோதனைக்கு அனுப்பினார். நாங்களும் அவசரம் அவசரமாக பாதுகாப்பு சோதனைகளை  முடித்து கடைசி பத்து நிமிடம் இருக்கும் பொது விமானத்துள் நுழைந்தோம், எனது இருக்கை பின்னால் இருப்பதால் அனைவரையும் கடந்து எனது இருக்கை எண்ணை பார்த்துக்கொண்டே சென்றேன் 56B அங்கே  ஒரு இன்ப அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது  ( கண்ணா ஒரு லட்டு தின்ன ஆசையா !!!) எனக்கு பக்கத்தில் ஒரு அழகான பெண் என்னை  பார்த்ததும் சிரித்து  எனக்கு வழிவிட்டாள் மணி பார்த்தேன் 10 : 33 இன்னும் மூன்று நிமிடத்தில் விமானம் கிளம்ப போகிறது பக்கத்தில் ஜென்னல் சீட்டில் யாரும் வரவில்லை (கண்ணா இரண்டு  லட்டு தின்ன ஆசையா!!)...
    

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

அமெரிக்கா - பயணத்திற்கு முன்தினம்

முன்தினம்

நாளை காலை பயணம், அதற்கு தேவையான உடைகளை தேடி, வெறும் மூன்று நாட்களுக்கு, அலமாரியே அலசிப்போட்டு, பயணத்திற்கு, அங்கு பொய் இறங்கியவுடன் இரவு உணவுக்கு, அடுத்தநாள் வேலைக்கு, மீண்டும்  இரவு உணவுக்கு , சுற்றிப்பார்க்க , திரும்பி வர என்று தனி தனியாக பிரித்தும் , எனக்கு நல்லதாய் நாலு dress இல்லை என்று புலம்பியும்  வீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருந்தேன், பாவம். டாக்ஸி புக் பண்ணலாமா, இல்லை ட்ரைன்ல போகலாமா, இல்லை மனைவியை விட்டுவிட சொல்லலாமா என்று ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தி, டாக்ஸி க்கு  கொடுக்கிற காசு வைத்து அமெரிக்காவில் செலவு செய்யலாம் என்றும் , மனைவியையும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் அலசி ஆராய்ந்து கடைசியாக train லே போகலாம் என்று முடிவு செய்தேன். இருந்தாலும் அந்த நாளில் ரெண்டு மூன்று  தடவையாவது டாக்ஸிக்கு போன் பண்ணனும் போன் பண்ணனும் சொல்லி இன்னும் எரிச்சலை கூட்டினேன்.  வழக்கமாக இந்தியா போகும் போதும் விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் போதும் கடைசியாக தூங்கி அவசரமாக கிளம்பும் நான், அன்று சீக்கிரமே பெட்டியை கட்டிவிட்டு,  ஆறு மணிக்கு எழுப்பு என்று கூறிவிட்டு பத்து மணிக்கே தூங்க சென்றுவிட்டேன். இரவு முழுவதும் கண் மூடி இருந்தது அனால் மனதுக்குள் மட்டும் வெவ்வேறு நிகழ்வுகள் வேகமாக காட்சி மாறிக்கொண்டிருந்தன. அப்போது மணி ஆகிவிட்டது எழுந்திரி என்று உள் மனது சொல்ல, மூளை அதை நிராகரித்து இது மாயை இன்னும் அலாரம் ஒலிக்கவில்லை கண் திறக்காதே என்று ஆணையிட்டது, மீண்டும் காட்சிகள் மாறின   மீண்டும் அதே குரல் மீண்டும் நிராகரிப்பு  இவ்வாறாக பலமுறை நிராகரித்து கடைசியாக மூளையின் ஆணையை மீறி கண் திறந்து பக்கத்திலிருந்த அலைப்பேசியில் மணி பார்த்தேன் 2 : 30 , 3 : 41 , 4 : 20 , 4 : 41 , 5 : 10 , 5 : 21 கடைசியாக இந்த விளையாட்டுக்கு ஒரு முடிவுக்கட்டி எழுந்தே விட்டேன். ஆனாலும் நன்றாக தூங்கியதுபோல் உற்சாகமாக இருந்தேன்.

வியாழன், 11 அக்டோபர், 2012

தழும்புகள்



அதன் கதை நம்மை தெரிந்தவர்களுக்கு தெரியும், அதன் கதை தெரிந்தவர்களே நமக்கு தெரிந்தவர்களாக முடியும். நம்மை முதல் முறை சந்திப்பவர்கள் கண்ணில் அது படும், சிலர் உடனே கேட்டுவிடுவர், சிலர் எப்போது கேட்கலாம் என்று காத்திருப்பர், மற்றும் சிலர் அருகிலிருப்பவரிடம் கேட்பர் அதை தெரிந்துகொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. அதை கேட்டவுடன் மிக துல்லிமாக எந்த வயதில், எந்த இடத்தில், யார் யார் சுற்றி இருந்தார்கள், நேரம், எப்படி நிகழ்ந்தது என்று விளக்கமாக கூறுவோம். பின் அவர்களும் அவர்களின் தழும்புகளை பற்றி பேசுவார்கள் அதே துல்லியத்துடன். இதுவே நம் உறவுகளை பலப்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கும்.

விளையாட்டில், விபத்தில்,
சண்டையில், திருவிழாவில், 
என்று தழும்புகளின் கதைகள் ஆயிரம்;
அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆயிரம்,
அதுவே நமது அடையாளங்கள் ஆகிடும்.


அதே போல் நம் மனதிலும் சில தழும்புகள் யாருக்கும் தேரியாமல்....

சத்தமில்லாமல் ஒரு புரட்சி




நமது தமிழ் சினிமாவின் நாடித்துடுப்பாய் இருந்த ஒரு விஷயம், ஒரு காட்சியின் அழுத்தம், திரைக்கதையில் திருப்பம், கதாபாத்திரத்தின் குணாதிசயம்   எல்லாமே இதை சுற்றியே இருந்தது, அது  தாலி.  

கணவன் மீதுக்கொண்ட தீராக்காதலை காட்ட, (அவன் மிகவும் கெட்டவனாக இருந்தாலும்)  தினமும்  அதற்கு குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்வதாக காண்பிக்கப்படும். 

மிகவும் துக்ககரமான காட்சி எதுவென்றால், கணவன் இறந்தபின் அலங்காரத்துடன் அழைத்துவந்து  அமங்கலிஆகும் காட்சி அதிலும் கடைசியாக தாலியை கழற்றி பாலில் போடும் காட்சி.

மிக கொடூரமான ஒரு கதாபாத்திரம் என்றால், பெண்  கழுத்திலிருந்து தாலியை பலவந்தமாக பறித்து எரியும் காட்சி, அது கணவனாக இருக்கலாம், மாமியாரை இருக்கலாம், பெண்ணின் தந்தையாக இருக்கலாம்.

கழுத்தில் ஒரு மஞ்சள் கயறு கட்டிக்கொண்டு, தங்க தாலியை கழற்றி கொடுப்பதும், அடகுவைப்பதும் என்று ஏழ்மையை காட்டி இருப்பார்கள்.

ஒரு பெண் புரட்சி புயலாக மாறுகிறாள், பொறுமை இழக்கிறாள், சுதந்திரம் பெறுகிறாள் என்பதை அந்த பெண்ணே, எல்லோரும் அதிர்ச்சிக்கொள்ள தன கையாலே தாலியை கழற்றி எறிகிறாள் என்று சித்தரித்து இருப்பார்கள், நமது திரைக்கதை ஆசிரியர்கள்.

தாலியை செய்வது என்பதே எவ்வளவு பயபக்தியுடன் செய்கிறார்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சில படங்களில் பார்த்திருப்போம். 

திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும். வரலக்ஷ்மி நோன்பு என்று கேள்வி பட்டிருப்போம், தாலி அணியும் முறைகளையும்  பலவிதங்களில் பார்த்திருப்போம் அல்லது தாலியை தவறாக அணிந்திருந்தாலோ, அணியாமல் இருந்தாலோ அவர்களை குறைகூருவதையும் கேட்டிருப்போம். ஆனால் இப்பொழுது அது பத்திரமாக வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக. இப்போது திரைப்படங்களிலும்  இதை மறந்துவிட்டனர், தொலைக்காட்சி தொடர்கள் கொஞ்சம் இதை கையில் எடுத்தாலும் அதே அளவுக்கு அதை மறக்கடிக்கவும் செய்கிறார்கள். தற்போது ஒரு சம்ப்ரதாயமாக இந்த திரு மாங்கல்யம் இருக்கிறது. இதுவும் மாறும்.  

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஊர்வலங்கள் இல்லாமல், எதிர்ப்புக்கள் இல்லாமல் இந்த புரட்சி நிகழ்ந்திருக்கிறது . சத்தமில்லாத  இந்த புரட்சிக்கு ஒரு பெரிய பங்கு மதிப்பிற்குரிய திருடர்களையும் சாரும்.  

இதுப்போல் சத்தமில்லாத புரட்சிகளில் சில குங்குமப்பொட்டு, மெட்டி, கோலம், பூ ...
 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கணினி




நீங்கள் சொல்வதெல்லாம் செய்யும் 
நீங்கள் போகமுடியாத இடத்திற்கும்  அழைத்து செல்லும் 
நீங்கள் கேட்பதை உங்கள் கண்முன் நிறுத்தும் 
அலாவுதினின் ஜீபூம்பா போல 
அதன் முன் நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள் 
கோபம் கொள்வீர்கள், உற்சாகம் அடைவீர்கள் 
என்றேனும் மக்கர் பண்ணால், மீண்டும் 
MIB போல் flash செய்து, எல்லாவற்றையும் மறக்கடிக்கலாம்
அதுவும் "என்னது காந்தி செத்துட்டாரா" என்று மீண்டும் முதலிலிருந்து வரும்
உங்கள் ஞாபகங்கள் சேகரிக்கும், உங்கள் ஞாபகங்களை தொலைக்கும் 
அப்படி ஒரு நண்பனையே நாம் தேடுகிறோம் நிஜ வாழ்க்கையில் 

இதற்கு சுஜாதாவின் பதில் இப்பிடி தான் இருக்கும் 
இதெல்லாம் ஒரு கவிதை !!!

"என்னய்யா விளையாடுகிறீர்களா "  - சுஜாதா அகோபர் 1972 கணையாழியின் கடைசி பக்கம் 

அறி'வாலி'யின் ஐடியா - 1


கொஞ்ச நாளா, வாரமா, மாசமா இல்ல வருஷமா எல்லோரும் பேசுற ஒரு விஷயம், பூமி வெப்பமயம் அடைஞ்சிடுச்சு, அதுக்கு காரணம் காற்று மாசுப்பாடு  என்றுதான்  இருக்கு. அதுக்கு தீர்வுகள்ன்னு நிறைய மாநாடு எல்லாம் போட்டு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், மரங்களை வெட்டாமல் இருப்போம், புகை கக்கும் வாகனங்களை குறைவாய் பயன்படுத்துவோம் அப்பிடி இப்பிடின்னு நிறைய சொல்லிட்டாங்க. எல்லாம் சரி ஆனா இப்போ  பிரச்னை என்னவென்றால், நாம் எல்லா  விஷயத்தையும் வேகமா செய்தே   பழக்கப்பட்டதால, நாம்  நட்ட மரம் வளர்வதுக்குள்ளே காற்றை இன்னும் பல மடங்கு நாசமாக்கிடுவோம்.  நம்ப மெதுவா மாசுபடுத்தி இருந்தாலோ, இல்லை முன்னாடியே யோசிச்சு இருந்தாலோ அதை பொறுமையா சரி செய்யலாம். அதனால இப்போ அவசரமான  ஒரு தீர்வு தேவை படுது. 

அதுக்கு என்னுடைய மண்டையில உதிச்ச ஒரு ஐடியா, நம்ப கிட்ட நிறைய பணம் இருக்கு வான்வெளிக்கு நிறைய செலவு செய்றோம், இந்த மரபணு  மாற்றப்பட்ட உயிரனம் ம.மா.உ (GMO - Geniticaly modified Organism )   என்கிற தொழில் நுட்பமும் இருக்கு , இந்த தொழில் நுட்பம்  சரியானதா, ஆபத்தானதா என்ற ஒரு விவாதத்துக்கு பிறகு வருவோம். முதலில் ம.மா.உ பற்றி பார்ப்போம் . ஒரு செடியின் விதையில் ஒரு சில மரபணுக்களை மாற்றம் செய்து பல மடங்கு மகசூல் தரும் ஒரு வித்தை தான் இது, இதற்கு அயல் நாடுகளில் பயங்கிரமான எதிர்ப்பு உள்ளதால் நம்ப ஊர்ல சோதனை செய்றாங்க(ஏன்னா நாம ரொம்போ நல்லவங்க, நிறைய காசு பாக்கலாம் என்று  எவ்ளோ ஏமாத்தினாலும் நம்புவோம் ), இதனால பாதிக்க பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றி நமது செய்தி தாள்களில் "கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை" என்று படித்து இருப்போம். இந்த தொழில் நுட்பத்தை தற்போது மேலை நாடுகளில் எண்ணெய் உற்பத்திக்கு பயன்பாடாக உள்ள செடிகளையும், விலங்கினங்களுக்கு உணவாக தேவை படும் பயிர் வகைகளையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். சரி நாம விஷயத்துக்கு வருவோம் இந்த அறிவியல் வளச்சியை   நாம் அப்படியே மரங்களின் இலைகளை பெரிதாக்கவும், அது அதிகமாகவோ அல்லது வேகமாகவோ  CO2 உரியவும் மாற்றி அமைத்தால் ஒரு பலன் கிடைக்குமே.

அப்பிடி பண்ணா நிலத்தடி நீரும் சீக்கிரம் காலி ஆகிவிடும், அந்த மரத்துக்கு பக்கத்துல ஒரு புல் பூண்டு கூட முளைக்காது, இது முடியாது, ஆபத்தானது என்று வைத்துக்கொண்டால், இன்னொரு ஐடியாவும் இருக்கு, இந்த இயற்கை நமக்கு காட்டிகொடுத்த ஒளிசெர்க்கை(photosynthesis) முறையை செயற்கை முறையில்   செய்தால்  என்ன , அதை எல்லா விளக்கு கம்பங்களிலும், வாகனகளிலும், வீடுகளிலும் வைத்தால் என்ன? ஒரு Air Purifier போல. 

கண்டிப்பாக எல்லா கண்டுபிடிப்பிலும் ஒரு ஆபத்து இருக்கத்தான் செய்யும். விமானம் கீழே விழுந்துவிடும், கப்பல் மூழிகிவிடும் என்று சொல்லி இருந்தால் ஏதுவும் கண்டுபிடித்திருக்க முடியாது. அந்த ஆபத்துக்கும் முன்கூட்டியே ஒரு தீர்வும் கண்டுபிடித்தால் ஒழுங்காக இருக்கும். 

Society needs both optimists and pessimists. The first invented the airplane while the second invented the parachute.


உடனே ஒரு கும்பல், எனக்குள்ளே இருக்கும் ஒருவனும் கூட சேர்ந்து  டேய் உன் மண்டையில் தோன்றியது யாருக்கும் தோன்றி இருக்காதா, பொய் வேலை எதாவது இருந்தா பார் என்று கத்துவது நன்றாகவே கேட்கிறது. எதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்.

சிறை பறவையின் நேரடி அனுபவம்

தினமலரில் நேற்று ஒரு பேட்டி ஒன்று படித்தேன். படித்தவுடன் மனதுக்குள் ஒரு எண்ண ஓட்டம். எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை மீது ஒரு பார்வை உண்டு, அவர்கள் பார்வையில் சந்தோசமும் நரகமும் எவ்வாறு 
மாறுபடுகிறது என்பதும் இந்த பேட்டியில் பன்னீர்செல்வம்  நம்ப George Cloonny   ஸ்டைலில் What else? என்று கேட்பது உணர முடிகிறது.

உங்களுக்கு அதுபோல் எதுவும் தோன்றவில்லை என்றால், அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

இதோ உங்களுக்காக


அவருடன் பேசியதிலிருந்து...

எதற்காக காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

திருட்டு பயல போலீசு புடுச்சா, காவல் நிலையம் தான் கதி.

உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே...
உங்க வீட்டில் சைக்கிள் இருக்கா, அது காணாமல் போனா நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்துவிடும்.

சைக்கிள் மட்டும் தான் திருடுவீர்களா?
மத்த பயலுக மாதிரி, பெரிய, பெரிய சமாச்சாரமெல்லாம் நமக்குத் தெரியாது; அது தேவையும் இல்லை. வீட்டுக்கு முன்னாடி பித்தளை பாத்திரம், இரும்புச் சட்டி, சைக்கிள திருடி விற்கிறதுக்குள்ள நான் படுறபாடு உங்களுக்குத் தெரியாது.

திருடுவது தவறு என்று தெரியவில்லையா?
சின்ன வயதில் இருந்து திருடுவதால் தவறு என்று தோணவில்லை. ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்ப பழகிப்போச்சு...

எத்தனை வயதில் இருந்து...
விருகம்பாக்கம் ஏரி கரைதான் நான் பிறந்து வளர்ந்தது. படிப்பு ஏறல. பத்து வயசுல திருட ஆரம்பிச்சேன். இப்ப நாற்பது ஆகுது. திருடிக்கொண்டே இருக்கிறேன்.

வேலைக்கு போகக்கூடாதா?
நல்லா இருக்கே உங்க கேள்வி. என்ன பற்றி கேள்விபட்ட யாராவது வேலை கொடுப்பாங்களா? தினமும் குடிக்க வேண்டும். அதற்காக திருடுகிறேன்.

குடிப்பழக்கம் திருடனாக்கி விட்டது என்கிறீர்களா?
என் வாழ்வில் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்க காலில் விழுந்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். யாரும் குடிக்காதீங்க. சின்ன வயசுல நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்தேன். அதன் பின் 24 மணி நேரமும் போதையில்தான் இருப்பேன். யாருகிட்டேயும் சண்டைக்கு போகமாட்டேன். வாயில் இருந்து வரும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. குடிக்கு அடிமையானதால், மனைவி பிரிந்து விட்டாள். அந்த சோகமும் வாட்டி வதைக்க, மேலும் குடிக்க ஆரம்பித்தேன். வயிறு பட்டினி கிடந்தாலும், மண்டைக்குள்ள போதை இருக்கணும். குடிக்க கையில் காசு இருக்காது. ஆனால், குடிக்க வேண்டும்; என்ன செய்வது. அதனால், திருட ஆரம்பிதேன்.

முதல் திருட்டு அனுபவத்தை சொல்லுங்கள்...
விருகம்பாக்கத்தில், சைக்கிளில் ஒருவர் வேலைக்கு சென்று வருவார். அவர் எங்கெல்லாம் போகிறார். சைக்கிளை எந்த இடத்தில் நிறுத்துகிறார் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டேன். அவர் கண்ணயர்ந்த சமயம் பார்த்து திருடி விட்டேன். குடிகாரனாக இருந்தவன் திருடனாகி விட்டேனே என, நினைத்து அன்று இரவு தூக்கமே வரவில்லை. சைக்கிள் விற்ற காசு தீர்ந்து போனதும், மீண்டும், மீண்டும் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தேன். ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

சிறைக்கு சென்ற அனுபவம்?
சிறைக்கு போவதும், வருவதுமே வாழ்க்கையாகிப் போனது. மத்திய சிறையில் காலடி எடுத்து வைத்தபோது, அடிப்பார்களோ என, பயமாகத்தான் இருந்தது. பெரிய, பெரிய ரவுடிகள் இருப்பார்கள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு உதைபடப் போகிறோம் என்று தான் நினைத்தேன். மத்திய சிறை கொடுமையானது தான், சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல்சொர்க்கம். மணியடிச்சா சாப்பாடு, வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி, உள்ளேயே கால்பந்து விளையாட்டு என, பொழுது போகும். சிறை அதிகாரிகள் அன்பானவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாகி விட்டவர்களை திருத்தும் மிக அற்புதமான இடம் அது.சிறை ரவுடிகள் பற்றி சொல்லுங்கள்பன்னீர்செல்வம் ரொம்ப "ஜாலி'யான ஆளு. அதனால ஆடச்சொல்லி, பாடச்சொல்லி கேட்பாங்க. சிறைக்குள் தனிமையில் அழுகிற ரவுடிகளை பார்த்து இருக்கிறேன். அவுங்களுக்கு பயம் அதிகம். அதனால் தான் கத்தியை மூன்றாவது கைபோல் பாவித்து வரு கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவுன்னு அவுங்களுக்கும் தெரிகிறது.

அங்கு என்னவெல்லாம் கிடைக்கிறது?
பெண்ணைத் தவிர எல்லாம் கிடைக்கும். கட்டு கட்டா துட்டு செலவு செய்தால், சகலவிதமான வசதிகளுடன் இருக்கலாம்.

இரண்டு பீடி கட்டுகள் தானே சிறைக்குள் அனுமதி?
மனுவுல வருபவர்கள் இரண்டு பீடி கட்டு தான் கொண்டு வர வேண்டும். என்னைப் போன்று இருப்பவர்களுக்கு துண்டு பீடி கூட கிடைக்காது. அதற்காக, பீடி உள்ளவர்களை சுற்றி பெரும் கூட்டம் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அவுங்க சொல்கிற வேலையெல்லாம் கேட்கணும். துணி துவைத்து தந்தால், ஒரு பீடி கொடுப்பாங்க. அந்த பீடியில், ஸ்டிக்கர் வரை குடித்தால் அரை நாள் ­­தாங்கும். விரல் பிடிக்கும் பகுதி வரை குடித்தால் ஒரு நாள் ஓடிப்போகும். அடுத்த பீடி கிடைக்கும் வரை, துண்டு பீடியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

கஞ்சா எப்படி வருகிறது?
அலைபேசி வழியில் வியாபாரம் முடிந்து விடுவதால், சிறைக்கு பின்புறத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள், ரப்பர் பந்தை சிறைக்குள் வீசுவார்கள். அதில் இருக்கும் கஞ்சா பொட்டலத்தில், இது இன்னாருக்கு என்பதற்கான அடையாளம் இருக்கும். அதை வேறு யாரும் எடுக்க மாட்டார்கள். சிறை கண்காணிப்பாளரிடம் மாட்டிக்கொண்டால், தனிமை சிறையில், போட்டு விடுவார்கள். சாப்பிடுவது, மலம் கழிப்பது எல்லாமே அங்கே தான். அந்த சிறைக்கு மட்டும் போகவே கூடாது.

"சிம்' கார்டெல்லாம் வைத்திருப்பார்களா?
கழிப்பறை பீங்கானை அடியில் அறுத்து, அதில் சிம்கார்டு பதுக்கி வைத்திருப்பார்கள், அலைபேசி இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. சிறை வாசிகள் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள். தலையில் கை வைத்தால், வீட்டுக்கு பேச வேண்டும் என, அர்த்தம். அதன்படி அலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்.

சிறையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது சொர்க்கம். மணியடிச்சா சோறு, வாரம் தோறும் சிக்கன். உடல் நிலை சரியில்லை என்றால், பேருந்து பிடித்து மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதுஇல்லை. அங்கேயே மருத்துவ மனை இருக்கிறது. மனமும், உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

வெளியில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
வெளியில் இருப்பது பிடிக்கவே இல்லை. எந்த சைக்கிளை பார்த்தாலும், திருடலாமா என்று தான் நினைக்க தோன்றுகிறது. அழுக்குபடிந்த ஆடையுடன் அலைய வேண்டியுள்ளது. சிறையில் அப்படி அல்ல. தும்பை பூ போல் தூசி படியாமல் இருக்கலாம். திருந்துவதற்கு சிறை மிகவும் அற்புதமான இடம்.

திருந்த மனம் இல்லையா?
போலீசு மனது வைத்தால், சிறைக்குள் போய் விடுவேன். நான் வளர்த்த செடிகள் எல்லாம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.