புதன், 16 மே, 2012

முதல் சந்திப்பு

ஞாயிறு மாலை 5.30 மணி அனைவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தோம், எனக்கு மட்டும் ஒரு படபடப்பு, கோவிலுக்கு தாமதமானது காரணமில்லை, முதன் முதலாய் பெண் பார்க்க போகிறேன். எப்பிடி இருப்பாள், என்னை பிடிக்குமா போன்ற கேள்விகள் என் மனதுக்குள், நம்மை அழகாய் காட்ட எந்த உடை போடலாம் என்ற குழப்பம் வேறு. தேர்வறையில் கேள்வித்தாள் பார்க்கும் முன் வருமே, பிரசவத்தின் கடைசி நிமிடங்களில் நம் பிள்ளையை பார்க்கும் முன் வருமே அது போன்ற ஒரு உணர்வு . எனக்கு பிடித்த நீல நிற முழுக்கை சட்டை, கருப்பு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றேன், அன்று கோவில் விளாகத்தில் தான் பூசை நடந்தது, உள்ள நுழைந்ததும் எனது கண்கள் அங்கிருந்த அனைவரையும் வரிசைப்படுத்தி, ஆண், பெண், வயது என வகை படுத்தி அலசி அராய்ந்து கொண்டிருந்தது. ஒரு காலி இடத்தில் பொய் அமர்ந்தேன். எனக்கு முன்னே ஒரு ஏழடி தூரத்தில் கருப்பு புள்ளி போட்ட வெள்ளை  சுடிதாரில் ஒரு பெண் இவளாய் இருப்பாளோ மனதிற்குள் ஒரு கேள்வி, முகம் தெரியவில்லை ஆனாலும் அழகாய் தெரிந்தாள்.  சமாதானம் சொல்ல திரும்பிய போது நெற்றிக்கு மேல் சுருள் முடி சின்ன கிரீடம் போல் இருந்தது. இவளாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், நாம் நினைப்பதெல்லாம் எங்கே நடக்க போகிறது, வேறு யாரோ வரபோகிறார்கள் நாம் ஏமாற போகிறோம் என்றும் நினைத்தேன்.

பூசை முடிந்தது, கூட்டமாய் நின்றிருந்த ஒரு ஒரு குடும்பத்தை நோக்கி என் அக்கா சென்றார்கள், பின் என்னையும் அழைத்து அறிமுக படுத்தினார்கள், எனக்கு முன் அமர்ந்து  இருந்த அதே பெண், அழகாய் இருந்தாள்.  நேற்று அழகு நிலையத்தில் நான் Bleaching, Facial  செய்தும் அந்த இருட்டில் அவர்களுக்கு நிறமாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒல்லியான, கருப்பு உருவம், பார்த்த உடனே பிடிக்கும் போலில்லை இரண்டு நாளில் கூறுவதாய் பிறிந்தார்கள்.

காத்து இருந்தேன், கற்பனைகளில், கனவுகளில், கேள்விகளில்,  ஒரு நாள், இரு நாள் .....


1 கருத்து: