புதன், 26 செப்டம்பர், 2012

கல்

உளியின் முதலடி பட்டதும் 
கல் கேட்டது, சிற்பியே, 
என்னை செதுக்க போகிறாயா ?
என்னவாய் செதுக்க போகிறாய் ?
அழகாய் செதுக்குவாயா? 

அவசரமாய் செதுக்காதே,
உன் உளி தடுமாறக்கூடும்.
அரைகுறையாய் செதுக்காதே,
நிர்கதியாய் நின்றுவிடும்.

கடவுளாய் செதுக்காதே 
சண்டைகள் வரக்கூடும்.
அலங்காரங்கள் செய்து, 
உன் கலையை மறைக்க கூடும். 
அனுமதி சீட்டு போட்டு,
பலரை அனுமதிக்காமல் 
போகக்கூடும். 

தான தலைவனாய் செதுக்காதே, 
பறவைகளின் எச்சத்தில் குளிப்பேன்,
பொய்களின் உச்சத்தில் மிதப்பேன் .

சிற்பியே, முடித்துவிட்டாயா?
நீ செதுக்கிய படிக்கல் எங்கே?

சிற்பியே, என் கூர்மையான 
முனைகளை மழுப்பிவிடு.
காயப்பட்டது,
நான் மட்டுமாக இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக